குழந்தைகளுக்கானப் படக்கதை - 'வண்டு-சிண்டு கதைகள்'

Wednesday, April 30, 2008

நீங்கள் (அடிக்கடி) கேட்பவை...10-லிருந்து 1-று வரை.வலைப்பூ பெப்சி! இது செமக் கூலு மச்சி!


வணக்கம்! வந்தனம்! சுஸ்-ஸ்வாகதம்! சு.ஸ்வேதா கம், இல்லைங்க. சுஸ்-ஸ்வாகதம்! ஒழுங்காப் படிங்க! :-)

வலைப்பூ பெப்சி!
இது செமக் கூலு மச்சி!

ரேடியோவில் ‘டாப் டென்’ பாடல்கள் கேட்டு டைம் பாஸ் செய்தவர்கள், நான் கடந்த பத்து நாட்களில் கேட்ட ‘டவுன் டென்’ டயலாக்ஸ் கேட்கவும்.

10
பசி வந்தா பத்தும் பறந்து போகும்.
(@ பத்து ரூபா இருந்தா பசி பறந்து போகும்ல.

@ ஆ!என் இதயத்தக் காணும். வேற ஒண்ணுமிலீங்க.ஒவரா ஹார்ட்ட டச் பண்ணி, அது முதுகு வழியாக் கீழ விழுந்துடுச்சு.நீங்க படிங்க, நான் குனிஞ்சு எடுத்துக்குறேன்)

9
‘ஒன்பது ரூபா நோட்டு’... நான் இன்னும் பாக்கலீங்க :-)
(@ யாருமே பாத்து இருக்க மாட்டாங்க.நோட்டு அச்சடிக்குறவன் கூடத் தான்.ஏன்னா அவன் குற்றவாளி.கோமாளி இல்ல, செல்லாத நோட்டு அச்சடிக்க.

@ ஸாரி கொஞ்சம் ஓவர் ஃப்ளோ ஆயுடுச்சு :-))

8
எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா.
(@ அய்யய்யோ! அய்யய்யோ! உலகம் ‘காலக்ஸி’ குள்ள இருக்குன்னு சொல்லி எங்க டீச்சர் என்னய ஏமாத்திட்டாங்க.யு டூ டிச்சர்?

@ ஓஓஓஓஓஓ!
ஓஓஓஓஓஓ!
ஓஓஓஓஓஓ! இதுக்குப் பேருதாங்க ‘ஓஓஓஒ’-ன்னு அழுகுறது :-0)

7
அந்த மந்திரவாதி என்ன பண்ணுனான் தெரியுமா? ஏழு கடல் ஏழு மலை தாண்டி ஒரு கூண்டுல அந்தக் கிளிய அடைச்சு வச்சுடான்.
(@ ஏழு குண்டல வாடா! வெங்கட் ரமணா! கோவிந்தா கோவிந்தா!-ன்னு தாங்க பக்தி மயமா கதை சொன்னேன், எங்க வீட்டுக் குட்டிக்கு.ஆனா இந்தக் கதை தான் கடைசீல ஒர்க்கவுட் ஆச்சு.

@ நீங்க எல்லாம் எப்படி?.என்னது, வீட்டுக்கு, தூங்க வராம இருக்கத்தான் (ஓவர் டைம்) கதை சொல்லுவீங்களா?. வெரி பேட் பாய்ஸ் :p)

6
ஆறு மனமே ஆறு! அந்த ஆண்டவன் கட்டளை ஆறு.
(@ நோ கமண்ட்ஸ். சாமி, கண்ணக் குத்திடும்.

@ நோ கமண்ட்ஸ். சாமி, கண்ணக் குத்திடும்.)

5
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
(@ வளையும். ஐந்துலயும் வளையும் ஐம்பதுலயும் வளையும். ஐநூத்தி ஐம்பதிலயும் வளையும்.எத்தன வாட்டி 5 என்ற எண்ணை எழுதினாலும், கீழ வளச்சுதாங்க எழுதணும்.இல்லேனா அது 5-சே இல்லை.வெறும் நேர்கோடு ,மேல் கோடு - மட்டும் தான்.

@ நன்றி.நன்றி.என்னது? இந்த அறிய கண்டுபிடிப்புக்கு வீடு தேடி வந்து விருது தறீங்களா. அட்ரஸ் வேணூமா?.ஹி..ஹி..ஹி..இந்த மாதிரி எத்தன வாட்டி ஏமாந்திருப்பேன்.விருது ஆட்டோவுல வரும்னு தெரியும்.அஸ்கு புஸ்கு)

4
நாலு பேரு தப்பாப் பேச மாட்டாங்க?
(@ தோடா! தமிழ் நாட்டுல பாதிப்பேரு தமிழத் தப்பாத் தான் பேசுறாங்க.நாலு பேர் தான் தப்பா பேசுறாங்கனு சொல்லுறது ரொம்பத் தப்பு

@ ‘தோடா’ என்பது தமிழ்ச் சொல் என நம்பி, தமிழைத் தப்பா ‘எழுதும்’ நாலு பேரில் நானும் சேர்கிறேன்.)

3
நான் பிடிச்ச முயலுக்கு மூணே கால்.
(@ ஒ! முயலுக்கெல்லாம் கால் பண்ண ஆரம்பிச்சுட்டியா? மொபைல் தான் இந்தியா முழுவதும் ஒரு ரூபாய், லோக்கல் எல்லாம் இலவசம்னு ஆயுடுச்சே.நடத்து நடத்து.

@ ஆமா! முயலோட எந்த மொழில பேசுன?)

1
ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்...
(@ நான் எப்பவுமே சிங்கிள் தாங்க. ‘ஒண்ணா’ தான் அதாவது தனியா தான் இருக்கேன்.ஹி..ஹி..ஹி..

@ இதுக்கு சிங்கள் கமெண்ட் தான்... ...அஸ்கு புஸ்கு)

பி.கு.: @, @-னு போட்டு அட்ட டைம் ரெண்டு கமெண்ட் நானே போட்டுக்கிட்டதாலயும்,

ரெண்டாவது எண் உள்ள டயலாக்க மறக்காம மறந்துட்டதாலயும் இந்தப் பதிவ ‘இரண்டில்லா மொக்கை மாதிரினு’ சொல்லி, வ.வா.ச. போட்டிக்கு சமர்ப்பிக்கிறேன். ;-)

தலைப்புல ‘ரெண்டு’ இருக்கணும்னு அவசியம் இல்லனு சொன்னதால, பதிவுலேயே ‘ரெண்டு’ இல்லாம எழுதி, எல்லாரையும் ‘ரெண்டு’ எங்கன்னு தேட வெச்சதால, போட்டி விதிகளின் படி, பதிவின் கருவில், ஐ மீன் , ‘மொக்கையின் கரு’-வில் ‘ரெண்டு’ கொண்டு வர, பாடு பட்ட எனக்கு, எல்லாரும் ‘மொத்த’ ஸாரி மொத்தமா கருத்துச் சொல்ல பின்னூட்டத்திற்கு வரவும்.

இது தேறுமா என்று சொல்லவும். நன்னி.:-)


பி.கு.:இரண்டு பதிவு போட வேண்டும் என்பது போட்டியின் விதி.கடைசி நாள் நெருங்குவதால், என்ன எழுதுவது என்று '10'சன் ஆனதால் வந்த '10' இது.கொஞ்சம் அட்ஜஸ் பண்ணிக்குங்க :D.

இதே போட்டிக்கான மற்ற இரண்டு பதிவுகள் இங்கும் இங்கும்.

ஒரே ஒரு கதை - வ.வா.ச. போட்டிக்கு... ... ...


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

கதைத் தலைப்பு : ‘ஊடல்’ (அ) ‘விரிசல்’

சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்காதே.

மலயருக்குக் கோபம்; ஆத்தங்கரைப் பக்கம் நடை.

மங்கலா, மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க எதிர்ப்புறம்.

சண்டைக்கு ஒரு அளவில்ல.எல்லாரும் மனுசங்க தானே.மனசு ஒத்துதானே ஆரம்பிச்சுது.இப்ப இல்லேனா எப்படி?

ரெண்டா இருக்குற மனச ஒண்ணாக்கலாம்னு ஆரம்பிச்சசுதுதானே. இப்ப தொட்டது குத்தம்னா எப்படி?. இந்த நூற்றாண்டுலயும் இப்படியா?

அரசமரத்தடியில கூடிக் கூடிப் பேசுனப்ப நல்லாத் தானே இருந்துச்சு. முழு சம்மதம்னு சொல்லிதானே,சிரிச்சு சிரிச்சு பேசுனது.

திருவிழா நேரம்.கோயில் தேர, இரண்டு, பக்கமும் சேர்ந்து நின்னு இழுத்தா கைகள் ஒண்ணாச் சேரத்தானே செய்யும். இப்ப, கண்ணக் கசக்கி கிட்டு ‘ஆ! ஆத்தா வையும்.இது தப்பு’- னா எப்படி.

தொடப்புடாதாம்ல.அது சரி!

ஏன்?

சண்ட முத்திப் போய் இப்ப ஊரே ரெண்டு பட்டுக் கெடக்குனா பாத்துக்குங்க.மலயர் ஒரு பக்கம்.மங்கலா(ர்) ஒரு பக்கம்.

கதைத்தலைப்பு : ‘விரிசல்’ (அ) ‘ஊடல்’.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

இது காதல் கதையா? ஆமாம் என்பவர்கள் இதை,இந்தக் கதையை, கடைசி பத்தியில் ஆரம்பித்து முதல் பத்திவரை, வரிசை மாற்றிப் படிக்கவும்.தலைகீழா இல்லைங்க. பத்தி வரிசை மட்டும் மாத்துங்க.வரிகள அப்படியே படிங்க. இப்ப கீழ், ஊதா, வரிலேர்ந்து ஆரம்பிங்க.போங்க.

படிச்சுட்டீங்களா? இல்லையா?.படிச்சுட்டு வாங்க.மத்தத அப்புறம் பாக்கலாம். ’ஸ்க்ரோல் அப் ப்ளீஸ்’

ஆச்சா? :-),இப்ப சொல்லுங்க இது காதல் கதையா? இல்ல சாதிக் கலவரமா?


பி.கு.:ஸ்ஸ்ஸ்ப்பாஆஆஅ! மூளையக் கசக்கிக் கசக்கி, சுண்டக்கா சைஸ்ல இருந்தது இப்ப கடுகு சைஸ் ஆயுடுச்சு.நல்லா இருந்தா, நல்லவங்க எல்லாரும் பின்னூட்டம் போடுங்க. சந்தோஷமா இருந்தா மூள வளரும்னு பக்கத்து வீட்டு நர்ஸ்சம்மா சொல்லுச்சு! ;-).

இதே போட்டிக்கான மற்ற இரண்டு இடுகைகள் இங்கும் இங்கும்.

Friday, April 25, 2008

நி.சி.பி. - பாகம் II. தமிழ் அறிய என்ன செய்யலாம்? நடைமுறைக்கு ஒத்துவருபவை எவை?


வெள்ளிப்பனி மலையின் மீதுலாவுவோம்
அடிமேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம்
எங்கள் பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்!
எங்கள் பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்!

அழுத்தம் திருத்தமாய், தெளிவான உச்சரிப்பு வேண்டுமென்று, இரண்டு வீடுகள் கேட்டும் வரை, சிறுவயதில் ஓங்கிப் பேசியது இன்னும் நினைவில் இருக்கிறது.எல்லாப் பேச்சுப்போட்டிகளுக்கும் முன்னால் நின்று பெயர் கொடுத்துவிடுவேன்.எழுதிக் கொடுக்கத்தான் அம்மா இருக்கிறார்களே.:)

5 நிமிடம் பேச வேண்டுமானால் 5 பக்கங்கள் வேண்டும்;முன்னுரை மேற்கோளோடு தொடங்கினால் கேட்பவரை நிமிர்ந்து உட்கார வைக்கலாம்;கணீரென்று பேச வேண்டும், திருத்தமாகப் பேச வேண்டும்;இது தமிழுக்கு அழகு.

எனவே, மறுதலிக்காத சொற்கள், எளிய உச்சரிப்பு, சலனமிலா நீரோடை போன்ற நடை, தலைப்பை விட்டு விலகாத கருத்து -இப்படி இருக்க வேண்டும், 5 பக்கங்களும்.அம்மா ஒரே மூச்சில் எழுதி முடித்துவிடுவார்,கருத்தை.மற்றதை, நான்கைந்து முறை சண்டை போட்டு, இருவருமாகக் கொண்டு வந்துவிடுவோம்.

இப்பொழுது நினைத்தாலும் இனிமையாக இருக்கிறது. அம்மா சொல்லுவார், ‘நிழலின் அருமை வெயிலில்; நட்பின் அருமை பிரிவில்’. இப்பொழுது இல்லை எனும் பொழுது அதிகமாக ஆசைப் படுகிறது மனம்.

இது நான் முன்னர் எழுதிய, ‘நிற்க! சிந்திக்க! பின்னூட்டமிடுக’ என்ற பதிவின் இரண்டாம் பகுதி.அந்தப் பகுதி படிக்காதவர்கள், இங்கே செல்லவும். படித்ததும் 'back' செய்து, இங்கேயே வரவும் :).

இன்று என்னைப் போன்று,இந்தியாவை விட்டு, தமிழ்ப் பேசா நாட்டிற்கு வந்துவிட்ட அல்லது தமிழ்நாட்டை விட்டு தமிழ் இல்லா ஊருக்கு மாற்றலாகிவிட்ட, ‘தமிழ் பேசத் தெரியாத இரண்டாம் தலைமுறை’ உடையவர்கள், என்ன செய்யலாம்? என்பதே அந்த முதல் பதிவின் கேள்வி.

இரண்டாம் தலைமுறையின் நடைமுறைக்கும் நமக்கும் ஒத்துவரும்படியான ‘தமிழ் கற்கும்’ வழிகள் என்ன? என்று வலயுலகில் தேடிய பொழுது, திரு.வி.சுப்பரமணியம் என்பவர், தன்னுடைய இந்தப் பதிவில் http://www.geocities.com/tamilclassnj/tips.html, அவ்வழிகள் சிலவற்றை அட்டவணையிட்டுருந்தார்.அவர் அனுமதியுடன் அதன் சாராம்சத்தை என் நடையில் இங்கு அளிக்கிறேன்.

முதல் காரணம்: வீட்டில், பெற்றோர் தமிழ் பேசுவதில்லை.

ஏன்:

ஏன் 1: தாய் தந்தை இருவரில் ஒருவருக்குத் தமிழ் தெரியாமல் இருக்கலாம்

ஏன் 2: அல்லது தாய் தந்தை இருவருமே தங்கள் பள்ளிப் பருவத்தில் தமிழ் கற்காமல் இருக்கலாம்

ஏன் 3: அல்லது தாய் தந்தை இருவருமே, பல ஆண்டுகளாகத் தமிழ்ப் பேசா ஊரிலேயே வசிப்பதால், ஆங்கிலம் அல்லது அந்த ஊரின் மொழிக்கே அவர்களும் மாறி இருக்கலாம்.

இதற்கு என்ன செய்யலாம்?

தாய் தந்தை இருவரில் ஒருவருக்குத் தமிழ் தெரியவில்லை என்றாலும் இருவருக்குமே தமிழ் பழக்கம் இல்லை என்றாலும், நீங்கள் உங்கள் உறவினரோடும் தமிழ் அறிந்த நண்பர்களோடும் தமிழிலேயேப் பேசுங்கள்.பிள்ளைகளை,அவர்களுடன் தமிழில் பேசுமாறு உற்சாகப்படுத்துங்கள்.நீங்கள் தான் உங்கள் குழந்தைகளுக்கு எடுத்துக்காட்டு.உங்களைப் பார்த்து அவர்களும் உங்களுடன் போட்டியிடத் தயாராவார்கள்.

வீட்டில் யார், தமிழ் சரளமாகப் பேசுகிறார்களோ அவர்களுக்குப் பரிசு என்று சொல்லுங்கள்.அண்ணாவுக்கு ஒரு ஸ்டிக்கர், அப்பாவுக்கு ஒரு ஸ்டிக்கர்,கடைக்குட்டிக்கு ஒரு ஸ்டிக்கர் என்று கொடுங்கள்.10 ஸ்டிக்கருக்குப்பின் ஒரு பரிசு உண்டென்று சொல்லுங்கள்.தமிழ் கற்கும் ஆர்வம் அதிகமாகும்.

பெற்றோர் முதலில் இதைச்செய்ய வேண்டும். உங்கள் பிள்ளைகளோடு வீட்டில் தமிலேயேப் பேசுங்கள், தமிழ் அறிந்த நண்பர்கள், உறவினர் அனைவரிடமும் நீங்களும் தமிழிலேயேப் பேசுங்கள்.பிள்ளைகளுடன் நீங்களும் அ-னா,ஆ-வன்னா படியுங்கள். :).

விளையாட்டு நேரம் போல் , ‘தமிழ் நேரம்’ வையுங்கள். இடையிடே தமிழில் (நல்ல) சினிமாப் பாடல்கள் போட்டுவிடுங்கள்.முதலில் ஆட ஆரம்பிப்பார்கள், பிறகு அர்த்தம் கேட்பார்கள், பிறகு, தானே பாடுவார்கள்.

தமிழ் படிக்கத் தெரியாத தாய் தந்தையரால் நிச்சயமாக இந்தப் பதிவை படிக்க இயலாது :). படிக்கும் நீங்கள் இதை அவர்களுக்குப் படித்துச் சொல்லுங்கள். இல்லை என்றால் திரு.சுப்பிரமணியன் அவர்களின் வலைச்சுட்டியை அவர்களுக்குக் கொடுங்கள்.

காரணம் இரண்டு:பெற்றோர் தமிழ் பேச விரும்புவதில்லை.

ஏன்:

பிள்ளைகள், வேறு நாடுகளிலெயே அல்லது இந்தியாவின் வேறு மாநிலங்களிலெயே வாழப்போவதால் தமிழ் அவசியமில்லை என நினைத்து சில பெற்றோரே , தமிழைப் பிள்ளைகளுக்கு வேண்டாம் என்று சொல்லுகின்றனர்.

இதற்கு என்ன செய்யலாம்?

இது முற்றிலும் தவறு. பெற்றோராகிய நாம், மொழியை மறந்தாலும் நம் பழக்க வழக்கம், உணவு முறை, மதம்(நம்பிக்கை இருந்தால்:)), நம் உடை, நம் மணவாழ்க்கை முறை இதை எதையும் மறப்பதில்லை.

நம் தாய்மொழி வேண்டாம் என்று நாம் ஆரம்பிக்கும் ஒரு வழக்கம், வளர்ந்து விட்ட நமக்கு, எந்த ஒரு பெரிய பாதிப்பையும் ஏற்படுத்தாமல் இருக்கலாம்.

ஆனால் அது வளரும் பிள்ளைகளைக் குழப்பும். வெளி ஆட்களின் நடுவே வளரும் அவர்களின், ‘தனித்தன்மை’யைக் கேள்விக்குறி ஆக்கும். நம் கலாச்சாரத்தில், இதை எடுத்துக்கொள் அதை விட்டுவிடு என்றால் அவர்களின் குழப்பம் இன்னும் அதிகமாகும். அவர்களுக்கு, அவர்கள் வாழும் நாட்டின், மாநிலத்தின், மக்கள் மட்டும் நண்பர்கள் அல்லவே.தமிழ் பேசும் குடும்பங்களும்,அந்தக் குடும்பங்களில் உள்ள , உங்கள் பிள்ளைகளின் வயதை ஒத்த பிள்ளைகளும் கூட நண்பர்கள் தானே.இவர்களுக்குத் தமிழ் தெரியவில்லை என்றால், தமிழ் நண்பர்களோடு எப்படிப் பேசுவார்கள். முதலில் எப்படித் தமிழ் நண்பர்களை ஏற்படுத்திக் கொள்வார்கள்.தங்கள் காலாச்சாரக் குழப்பங்களைத் தங்கள் வயதொத்தவர்கள் அனைவரும் எப்படிக் கையாள்கிறார்கள் என்று தமிழ் அறியாமலேயே எப்படி அறிவார்கள்.

நீங்கள் வாழும் இடத்தில் உங்கள் பிள்ளைகளுக்கு ஒரு வழிகாட்டல் உருவாக்க மிக அடிப்படைத் தேவை தாய்மொழி அவசியம் என்ற உணரல்.

அதை மிக எளிய முறையில் எப்படிச் செய்வது என்பது அடுத்த வாரம்,அடுத்த பதிவில். நம் சக வலைகளாகிய குட்டீஸ் கார்னரிலும், பேரண்ட்ஸ் கிளப்பிலும் கொஞ்சம் பேசிவிட்டு வருகிறேன்... ...:).(இன்னும் அவர்களுக்கே, சொல்லவில்லை , பேச வருகிறேன் என்று :p). அதுவரை, இதைக்கேளுங்கள்..

தொடரும்... ...

பி.கு.: இதைச் செய்து பார்க்கலாமே என்ற எண்ணத்தின் விளைவு தான் இந்தப் பதிவு.இதைத் தான், செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை. :).பிடித்திருந்தாலும், வேறு ஆலோசனைகள் இருந்தாலும் பின்னூட்டமிடுங்கள்.:-)

Friday, April 18, 2008

இந்தச் சுட்டியில் உள்ள 5 தவறுகளைச் சொல்லவும் - புதிர் விடைகள்

இந்தச் சுட்டியில் உள்ள 5 தவறுகளைச் சொல்லவும் - புதிர் விடைகள்


படமாகப் போட்டுவிட்டேன். படம் மேல் கிளிக் செய்து பெரிதாகப் பார்க்கவும்.




















முதல் தவறு
: தலைப்பிலேயே உள்ளது. 'சுட்டி' என்பது 'பதிவு' என்று இருக்க வேண்டும். சுட்டி = pointer or Link. பதிவு = Post.

இரண்டாவது தவறு : காபி சாப்பிட முடியாது. குடிக்க வேண்டும்.

மூன்றாவது தவறு
: 'என்ன சந்தேகம்? வருசயாப் படிங்க' என்று சொல்லி, வரிசைப் படுத்தியிருக்கும் மூன்று கேள்விகளின் நம்பரிங் 1,2,3 என்று இல்லாமல் 1,3,4 என்று உள்ளன.

நான்காவது தவறு : 'புதுசு புதுசு கண்ணா' இல்லை 'புதுசு கண்ணா' மட்டும் தான்.அதாவது ஒரு 'புதுசு' எக்ஸ்ட்ரா. :-)

ஐந்தாவது தவறு : இதுவும் எக்ஸ்ட்ரா தான். அதாவது 'ஸ' என்ற தேவையற்ற எழுத்து ஓன்று உள்ளது.அது இருக்கக் கூடாது.

அவ்ளோதான். உத்னா ஹி ஹே. தட்ஸ் ஆல்.

ஹி..ஹி..ஹி..அடிக்கவரவுங்க, ஆட்டோ அனுப்புறவுங்க, அட்ரஸ் கேக்குறவுங்க எல்லாம்...இதப் ப்ளீஸ் படுச்சுடுங்க...

அதாவது...

ஐ மீன்...

பாத் ஏ ஹெ கி...

நான் ரெண்டு நாள் வில் பி சஃபரிங் ஃபரம்....

எஸ்கேப்....:D :D :D

பி.கு.: சரியா என் கடிகாரத்தில் மணி 11.56 P.M. :).தூக்கம் வருது. முடிவுகள் பின்னர். என்னது பதில் சொன்னது ஒரே ஒரு ஆள் தான் அதுக்கு என்ன பின்னரா?...ஹி..ஹி..ஹி...GN. SD. ;)

Thursday, April 17, 2008

காதலிக்கு வாழ்த்து! காதலனுக்கு வாழ்த்து! பெற்றோர்க்கு வாழ்த்து! கவிஞனின் ஆப்பு!

காதலிக்கு வாழ்த்து!
~~~~~~~~~~~~~~~~~
ஒற்றை ரோஜா அழகு!
கொடுப்பவர் கொடுத்தால்
இன்னும் அழகு...



அற்றைத் திங்கள் அழகு!
இருப்பவர் இருந்தால்
இன்னும் அழகு...

பற்றைத் துறப்பது அழகு!
பற்றாமல் (தீ) பற்றுவது
இன்னும் அழகு...

வெட்டை வெளித் தனிமை;
மொட்டை மாடி இனிமை;
சுட்டுவிட்ட நிலவு;
சுடும் கனவு;

யாவும் பெற்று கசிந்துருக வாழ்த்துகள்!
யாவும் கொடுத்து பல்லாண்டு வாழ வாழ்த்துகள்!



காதலுனுக்கு வாழ்த்து!
~~~~~~~~~~~~~~~~~~~
காதல் அழகு!
காதலி கிடைத்தால்
இன்னும் அழகு...


யமஹா அழகு!
பில்லியன் உயர்த்தினால்
இன்னும் அழகு...

பீட்சா அழகு!
க்ரெடிட்கார்ட் இருந்தால்
இன்னும் அழகு...

விட்டு விட்ட சிகரெட்;
கட்டி விட்ட ஃபோன்பில்;
சுட்டுவிட்ட நிலவு;
சுடும் கனவு;

யாவும் பெற்று கசிந்துருக வாழ்த்துகள்!
யாவும் கொடுத்து பல்லாண்டு வாழ வாழ்த்துகள்!


பெற்றோர்க்கு வாழ்த்து!
~~~~~~~~~~~~~~~~~~~~

பெற்ற பிள்ளைகள் அழகு!
பட்டம் பெற்றால்
இன்னும் அழகு...

கட்டிய வீடு அழகு!
படுத்ததும் வரும் தூக்கம்
இன்னும் அழகு...

கடமைகள் அழகு!
இனிதே முடிந்தால்
இன்னும் அழகு...



நீண்ட ஆயுள்;
நீடிக்கும் மகிழ்ச்சி;
நிறைய பேரப்பிள்ளைகள்;
நிம்மதியான உறக்கம்;

யாவும் பெற்று மகிழ்ந்திருக்க வாழ்த்துகள்!
யாவும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகள்!


கவிஞனின் ஆப்பு!
~~~~~~~~~~~~~~~~

காதல் அழகு!
திருமணத்தில் முடிந்தால்
இன்னும் அழகு...

காதலன் அழகு!
(மாலையிட்ட பிறகும்)
மாறாமல் இருந்தால்
இன்னும் அழகு...




காதலி அழகு!
(மாலையிட்ட பிறகும்)
பேசாமல் இருந்தால்
இன்னும் அழகு...

தாய்தந்தை கனவு அழகு!
சற்று வளைந்து கொடுத்தால்
இன்னும் அழகு...

கவிதை அழகு!
பொய் கலந்தால்
இன்னும் அழகு...

கற்பனை அழகு!
தொடர்பில்லாமல் இருந்தால்
இன்னும் அழகு...

அழகோ அழகு!
அழகோ அழகு!
அழகோ அழகு!

பி.கு.: ‘இந்தச் சுட்டியில் உள்ள 5 தவறுகளைச் சொல்லவும்’- போட்டியின் விடைகள் வெள்ளி இரவு 12:00 மணிக்கு அறிவிக்கப் படும். இன்னமும் யாரும் விடை சொல்லவில்லை என்றாலும். ;-)

Monday, April 14, 2008

இந்தச் சுட்டியில் உள்ள 5 தவறுகளைச் சொல்லவும் pls.


எல்லாருக்கும் வணக்கம்!

நான் வலைப்பூவுக்குப் புதுசு... ... ஆஹா, இந்தப் புராணத்த நிறைய வாட்டி, சொல்லிட்டேனோ?...சரி விடுங்க, அரசியல்ல இதெல்லாம் சகஜம் தானே.(அப்படின்னு சொன்னப்புறம் ஹி..ஹி..ஹி..னு வழியறது மரபு).ஹி..ஹி..ஹி

இந்த வரியைப் படிக்குறவங்க, இந்தத் ‘த்’-தன்னாவை இப்பப் படிக்குறவுங்க, மனசாட்சி தொட்டு, சொல்லுங்க... ...நீங்க முதல் பதிவு போடும் போது (அதாவது என்ன மாதிரி புதுசா வலைப்பூவுக்கு வந்த போது... ...ஹி..ஹி..ஹி..), இந்த, சந்தேகம் எல்லாம் வந்ததா?

எந்த சந்தேகம்? வருசயாப் படிங்க... ...

1. எதடா எழுதுறது? சாப்ட்ட காபியையா?, சந்திச்ச இனா வானாவையா? சிரிச்ச ஜோக்கையா?
3. ஒரு post போட்டவுடனே... ... 15 நிமிஷத்துக்கு ஒரு வாட்டி, பின்னூட்ட status பாத்துக்குறது
4. அப்புறம், முக்கியமா, நம்ம blog template வித்தியாசமா இருக்கணுமேன்னு, எல்லார் வீட்டு blog-யையும் போய் எட்டிப் பாத்து, போன விஷயத்த மறந்து போய், அங்கன இருந்த post பூராவையும் படுச்சுப் போட்டு... ...

ஆஹா, அம்புட்டு பேரும் இம்புட்டு எழுதுறாங்களா... ...நம்ம blog-குக்கு யார் வருவான்னு... ...நொந்து நூலாகி, வெந்து வேர்க்கடலை ஆகி, ஒரு வாரம் கடையை இழுத்து மூடுறது

உண்மையா இல்லையா?

என்னாது இல்லையா...இதெல்லாம் அநியாமுங்க, ஏற்கனவே வெந்த வேர்க்கடலய, மிக்சீல போடாதீங்க. வந்து காப்பாத்துங்க. இதெல்லாம் சகஜம், இது ‘புதுசு புதுசு கண்ணா புதுசு’-களின் 'நியாயமான அறிகுறி' அப்புடின்னு எல்லாம் சொல்லுங்க... ஸ

பி.கு.: ஆமாமுங்க, இதுல 5 தவறுகள் இருக்குங்க (அதாவது எனக்குத் தெரிஞ்சு 5-ங்க)... ...என் சந்தேகத்துக்குப் பதில் சொல்லுற உங்களுக்கும் பொழுது போகனுங்களே... ...அதான் proof பாக்காம போட்டுட்டேன்... ...ஒரே ஒரு க்ளூ தாரேன்... ...கண்டிப்பா எழுத்துப் பிழையச் சொல்லலங்க.

Enjoy-ங்க. :). புடுச்சுருந்தா பின்னூட்டம் போடுங்க. பொழச்சுக்குவேன்.

இதற்கான விடைகள் இங்கே...

ஒலிக்கும்...

Tuesday, April 8, 2008

தனிமை



உறைந்தது
இயற்கை...

உரைத்தது
தனிமை...

-NewBee

Monday, April 7, 2008

நேற்று பெய்த பனியில் ஒரு 'வெண்' - பா

இப்படியே இருந்து விட்ட பச்சை மைதானம்...



அப்படியே இருக்கவில்லை நேற்று மட்டும்...



தினம் தினம் கடந்து போன ஒற்றை மரங்கள்...



குடம் குடம் என குடித்துவிட்டன குங்குமப்பூவை...



பொழுதன்றும் ஏறிஇறங்கிய தோட்டப்படிகட்டு...



பொசுக்கென்று போர்த்தியது பஞ்சுப் போர்வை...


நாட்க்கணக்காய் வளர்த்து வந்த ஆரஞ்சுப் பூ...



நாணமாய் சிவந்து விட்டது நேற்று மட்டும்...



நேற்றுப் பெய்த பனியில் ஒரு 'வெண்' - பா...



நேற்று மட்டும் பதிந்திருந்த என் காலடித்தடம்...


எல்லாமே மாறிப்போனது நேற்று மட்டும்...
ஆமாமாம் மாறாதது மாற்றம் தானே...

ஒலிக்கும்... ...

Wednesday, April 2, 2008

இன்று ஏன் புதிதாய்?


நீ கடிகாரம் தொலைத்த பொழுது
நிமிடத்திற்கு நான்கு முறை
என் பேர் சொல்லி அழைத்து,
நேரம் கேட்டதால்...

புதிதாய் வாங்கிய உன் பெயர் போட்ட கடிகாரத்தை
‘இருக்கட்டும் இது!’ என்று ஒளித்து வைத்தேன்.

உனக்காக;

நீ பசியாய் வந்த பொழுது
தண்ணீர்க்குவளையும் உப்புத்தூவியும்
என் பேர் சொல்லி அழைத்து,
வேண்டும் என்றதால்...

புதிதாய் வாங்கிய உன் பெயர் போட்ட இரண்டையும்
‘காணோமே அது!’ என்று ஒளித்து வைத்தேன்.

உனக்காக;

நீ பிரச்சனையோடு வந்த பொழுது
முழுதாய் ஒரு நிமிடம் பார்ப்பாய்
என் பேர் சொல்லி அழைத்து,
என்முகம் என்பதனால்...

புதிதாய் வந்த இழப்பையும் கண்ணீரையும்
‘சரி போகட்டும் அது!’ என்று ஒளித்து வைத்தேன்.

உனக்காக;

நீ (உன்) தாய் தந்தையோடு வந்த பொழுது
பேச்சுவார்த்தை முற்றிய பிறகும்
என் பேர் சொல்லி அழைத்து,
என்னைத் திட்டாமல் விட்டதனால்...

புதிது புதிதாய், உன் பெயர் போட்டு வந்த சண்டைகளையும்
‘சாவி போட்டே இருக்கட்டும்’ என்று ஒளித்து வைத்தேன்.

உனக்காக;

இப்படி ஒளித்துவைத்து ஒளித்துவைத்து
உன்னைக் காதலித்ததால் தான்
அப்படி என்ன செய்துவிட்டாய் ‘எனக்காக?’, என்று
என் பேர் சொல்லி அழைத்து...

புதிதாய் ஒருவலி தந்தாயே இன்று;
‘அதுவும் இருக்கட்டும்’ என்று ஒளித்து வைக்கவா?

உனக்காக.

ஒலிக்கும்... ...

blogger templates 3 columns | Make Money Online